புதன், மார்ச் 07, 2018

இராம்தேவின் மூச்சுக்கட்டு (பிராணாயாமம்)

ஒரு நாள் காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்து சீ (Zee) தமிழ் தொக்காவை   பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஓக ஆசிரியர் இராம்தேவ் பெரிய திடலில் நிறைய மக்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இவர் பெரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பெரும் தொகை பெற்றுக்கொண்டு பயிற்சி அளிப்பவர். நம்மிடம் இவருக்கு கொடுக்கும் அளவு பணம் இல்லை என்பதால் இலவசமாக வரும் இவரின் நிகழ்ச்சியை கவனித்தேன்.

 கீழ்கண்ட வரிசையில்  செய்யவேண்டும் . மாற்றி கூடாது மொத்தம் ஏழு  பயிற்சிகள் உள்ளன. நிறைய ஓகப்பயிற்சிகளை செய்ய முடியாதவர்கள் குறைந்தது இதை செய்தால் அவர்களுக்கு முழு ஓகம் செய்த பலன்களில் நிறைய கிட்டும். முதலில் தமிழ் உரை கொடுத்தார்கள் இப்ப இந்தி தான் அதனால் நிகழ்ச்சியை பார்த்த இந்தி தெரிந்தவர்கள் ஏதாவது தவறு இருந்தால் சொல்லவும்
(இது இராம்தேவ் செய்து காட்டிய முறை மற்ற ஆசிரியர்கள் வேறு மாதிரியும் சொல்லலாம்)

முதலாவதாக பகிர்கா (Bhastrika) மூச்சு கட்டு 
Bhastrika என்றால் துருத்தி (ஒரு வகை கருவி) என்று பொருள்


2-5 நிமிடம்
செய்முறை- நமக்கு தோதான ஆசனத்தில் உட்கார்ந்து கொள்ளவேண்டும். நுரையீரல் நிரம்பும் படி நன்றாக மூச்சை உள்ளிழுக்கவும் அப்போது நெஞ்சு பகுதி விரிவடையும் ஏன்னா அவ்வளவு காத்து உள்ள போகுதல்ல.  பின்பு மூச்சை  முழுவதுமாக வெளிவிடவும் , மூச்சை நன்றாக உள்ளிழுத்து முழுவதுமாக வெளிவிடவும் இது மாதிரி குறைந்தது 2 நிமிடங்கள் அதிகபட்சம் 5 நிமிடங்கள் செய்யவும்.


பலன்கள்  - நெஞ்சாங்கூடு (இதயம்), நுரையீரல், மூளை, பலவிதமான தலைவலிகள், நீரழிவு, வயிற்று தொல்லைகள், மலம் வராதது, மூச்சிரைப்பு, குறட்டை, உள்ளத்தை ஒருமுகப்படுத்துதல், நினைவு தப்புதல், காமாலை, அமிலம் சுரப்பது, கர்பப்பை, புற்று நோய், வாயு தொல்லை, உடல் பருமன், கொழுப்பு, ஒவ்வாமை, நோய்  எதிர்ப்பு என்று எல்லாவித உடல் உறுப்புகளுக்கும் பிணிகளுக்கும் இது நல்லது.

இரண்டாவதாக கபாலபதி


 30 முறை அல்லது ஒரு நிமிடத்திற்கு தொடக்கத்தில் செய்யவும் , 5 -10 நிமிடம்

செய்முறை - மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக மூச்சை வெளிவிடவும். அப்போது வயிறு உள்நோக்கி போக வேண்டும் அந்த அளவு விசையுடன் முழுவதுமாக காற்றை வெளிவிடவும்.  இதை முதலில்  30 முறை அல்லது ஒரு நிமிடத்திற்கு தொடக்கத்தில் செய்யவும் , பின்பு 5 நிமிடம் அப்புறம் 10 நிமிடம் என அதிகரிக்கவும்

பலன்கள் - பகிர்கா (Bhastrika) வுக்கு என்ன பலனோ அவையாவும் இதை செய்தாலும் கிட்டும்.

அதிக இரத்த  அழுத்தம் உள்ளவர்கள் உடல் பலவீனமாவர்கள் கபாலபதியை  தவிர்ப்பது நலம்.அல்லது 15 முறை செய்யவும்.


மூன்றாவதாக பகாயா Bahaya


செய்முறை
மூச்சை முழுதும் வெளிவிடுங்கள் பின்பு தாடையை நெஞ்சில் படும் படி வைக்கவும். அதன் பின் வயிற்றை நன்றாக உள்ளிழுக்கவும், வயிறை உள்ளிழுத்த நிலையிலேயே சிறிது நேரம் இருக்கவும் பின்பு தாடையை தூக்கி பழைபடிக்கு வந்து மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதே முறையை திரும்ப செய்யவும்.

தொடக்கத்தில் பகாயா செய்பவர்கள் இதை 3-5 முறை செய்யவும்,. பல நாட்கள் செய்பவர்கள் இதை 11 முறை செய்யவும் குளிர்காலத்தில் இதை இவர்கள் 21 முறை செய்யவேண்டும்.

பலன்கள்
 குடலிறக்கம்(hernia), வயிற்று நோய்கள், ஆண் பெண் மர்ம உறுப்புகளில் தொற்று, மூத்திரப்பை என்று பலவற்றுக்கு இது சிறந்தது.

அதிக இரத்த கொதிப்பு உள்ளவர்கள் நெஞ்சாங்கூட்டில் (இதயம்) சிக்கல் உள்ளவர்கள் இம் பயிற்சியை செய்யக்கூடாது.


நான்காவதாக நாடி சுத்தி



குறைந்தது 10 நிமிடம்
செய்முறை
வலது நாசி துவாரத்தை பெருவிரலால் அடைத்துக்கொள்ளவும் இடது நாசியால் மூச்சை உள்ளிழுக்கவும் . பின்பு இடது நாசி துவாரத்தை நடு, மோதிர விரலால் அடைத்துக்கொண்டு வலது நாசியில்  மூச்சை வெளிவிடவும். பின்பு மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது வலது நாசி துவாரத்தை பெருவிரலால் அடைத்துக்கொள்ளவும் இடது நாசியால் மூச்சை வெளியிடவும் இது ஒரு சுற்று . குறைந்தது  10 நிமிடங்களுக்கு இதை செய்யவும். மூச்சை உள்ளிழுக்கும் நேரத்தை விட வெளி்விடும் நேரம்  அதிகமாக இருக்க வேண்டும்

பலன்கள் 
நெஞ்சாங்கூட்டு சிக்கல்(கள்), அதிக இரத்த அழுத்தம், நெஞ்சாங்கூட்டு (இரந்த நாளங்கள்\குழாய்கள்) அடைப்பு, சளி, நினைவு தப்புதல், மூளை, நரம்புகள், உளச்சோர்வு, மூச்சிரைப்பு, எலும்பு உட்புழை sinus, ஒவ்வாமை மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் இது பலன் கொடுக்கும் அதனாலயே சிலர் இதை இராச மூச்சு கட்டு (பிராணாயாமம்) என்பர்.மூச்சை வயிற்றில் நிரப்பாமல் நுரையீரழில் நிரப்புங்கள் (நுரையீரழில் நிரப்பினால் நெஞ்சு விரிவடையும் நெஞ்சு புடைக்கும்), வயிற்றில் உள்ள உறுப்புகள் மூச்சை உள்வாங்காது.அவசரப்படாமல் மெதுவாக இதை (மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதை) செய்யவும்.


ஐந்தாவதாக தேனி (பிரம்மரி )

10 நிமிடம்
செய்முறை -
காதின் வாயிலை (துவாரத்தை) கட்டை விரலால் மூடவும் ஆள் காட்டி விரலை நெற்றியின் மீது வைக்கவும் நடு விரலை கண்களின் மீதும் மோதிர விரலை வாயின் மீதும் சுண்டு விரலை தாடையின் மீதும் வைக்கவும். இம் என்று தேனி  சத்தம் போல் மூக்கின் வழியாக சத்தம் எழுப்பவும். இதை செய்யும் போது புருவங்களுக்கு மத்தியில் உங்கள் கவனம் இருக்கவேண்டும்.

இதை 10 நிமிடம் செய்யவும். இம் என்று குறைந்தது 20 விநாடிகளுக்கு மேல் தொடர்ச்சியாக சத்தம் (இடைவெளி கூடாது)  எழுப்பினால் நலத்துடன் உள்ளதாக பொருள்.

பலன்கள்  -  இரத்த அழுத்தம், இரத்த நாளங்களில் உள்ள அடைப்பு,  எலும்பு உட்புழை sinus, உள்ளச்சோர்வு, உள்ளத்தின் பரபரப்பு, பயம் முதலான உள்ளத்தின் குழப்பங்கள் நீங்கும். தேனி சத்தம் அந்த ரீங்காரம் எதிர் மறையான சக்திகளை போக்கும், அந்த ரீங்காரம் மூளைக்கு புத்துணர்வை தரும்.


ஆறாவதாக ஓதல்


10 நிமிடம்

செய்முறை -
மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் நீண்ட நேரம் இருக்க வேண்டும்.   எந்த சிரமமும் இல்லாமல் மெதுவாக இயல்பாக மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து பின் வெளியிடும் போது ஓம் என்று மெதுவாக ஓதிக்கொண்டே மூச்சை வெளிவிடவும். மூச்சு உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் இணைந்த செயல் ஒரு நிமிடம் இருக்க வேண்டும். முடிந்தால் அது நிமிடத்துக்கு அதிகமாகவும் இருக்கலாம். ஓதலின் போது உங்கள் கவனம் மூச்சின் மீதே இருக்கட்டும்.

குறைந்தது 10 நிமிடங்களுக்கு ஓதலை செய்யவும்.

பலன்கள்  
தூக்கமின்மைக்கு இது சிறந்த மருந்து. கனவுகள் அற்ற தூக்கம் கிடைக்கும். ஆழ் உள்ள தூக்கம் கிடைக்க உதவும்.

ஏழாவதாக ஓங்காரம்

செய்முறை
கண்களை மூடி இயல்பாக மூச்சு விட்டு எதையும் நினைக்காமல் உள்ளத்தை அலைபாயவிடாமல் அமைதியாக  மூன்று நிமிடங்கள் உட்கார்ந்திருக்கவும்.

பலன்கள் -
ஆன்ம பலம் பெருகும், ஓம் என்று தொடர்ச்சியான ஒலி ஆன்மாவைப் பற்றிய அறிவையும் புரிதலையும் விரிவாக்கும். தியானத்திற்கு இது மிகவும் உகந்தது   (பல மணி நேரம் இப்படி இருப்பதே தியானமாகும்)


http://www.atmabodh.net/2015/06/pranayama.html


செவ்வாய், நவம்பர் 07, 2017

கபாலபதி மூச்சுப் பயிற்சி



சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்காரவும் கூன் போட்டு உட்காரதீர்கள். எப்படி வேண்டுமென்றாலும் உங்கள் வசதிப்படி உட்காரலாம் .ஆனால் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்காரவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு வேகமாக வெளிவிடவும்.  இது தான் கபாலபதி இது மாறாது. விசையுடன் மூச்சை வெளியிடும் போது தலை ஆடக்கூடாது அடிவயிறு உள்போகலாம் நெஞ்சு ஆடலாம்.

நான்கைந்து முறை நன்றாக மூச்சை இழுத்து விடவும் பின்பு இயல்பாக ஒரு நிமிடம் மூச்சு விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக
அதாவது முடிந்த அளவு வேகமாக வெளிவிடவும் இதே மாதிரி 5 நிமிடங்களுக்கு செய்யவும். பின்பு 1 நிமிடம் இயல்பாக மூச்சு விடவும் பின்பு 5 நிமிடங்கள்  கபாலபதி செய்யவும் பின்பு 1 நிமிடம் இயல்பாக மூச்சு விடவும் பின்பு 5 நிமிடங்கள் கபாலபதி செய்யவும்

வேறு முறை
நாசி சுத்தி முத்திரை
நாடி சுத்தி முறையில் செய்வது. அதாவது இடது மூக்கில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வலது மூக்கில் விசையாக மூச்சை வெளியிடுவது. பின்பு வலது 
மூக்கில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து  இடது மூக்கில் விசையாக மூச்சை வெளியிடுவது, இது மாதிரி மாற்றி மாற்றி 5 நிமிடங்கள் செய்து பின் 1 நிமிடம்  ஓய்வெடுத்து பின் 5 நிமிடம் செய்யனும். 1 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் 5 நிமிடம் செய்யவும். (இது சிறப்பான முறை ஏன்னா 2 நாசியும் தூய்மையாகும்)

வேறு முறை
இடது மூக்கை\ஓட்டையை மூடிக்கொள்ளவும் வலது மூக்கில்\ஓட்டையில் மூச்சை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு  வேகமாக வெளிவிடவும்ர 5 நிமிடங்கள் செய்யவும். இதே மாதிரி மூன்று சுற்றுகள் செய்யவும்.

வேறு முறை
வலது மூக்கை\ஓட்டையை மூடிக்கொள்ளவும் இடது மூக்கில்\ஓட்டையில் மூச்சை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு  வேகமாக வெளிவிடவும்ர 5 நிமிடங்கள் செய்யவும். இதே மாதிரி மூன்று சுற்றுகள் செய்யவும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?
வலிப்பு உள்ளவர்கள், வெர்டிகோ உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாதாவிடாய் கால பெண்கள், கருவுற்ற பெண்கள், இதய நோய் உள்ளவர்கள், பக்க வாதம் உள்ளவர்கள், குடல் இறக்கம் உள்ளவர்கள். செய்யும் போது தலை சுற்றினாலோ, தலை வலித்தாலோ செய்வதை நிறுத்திவிடவும், இரு நாட்களுக்கு இதேமாதிரி செய்யும் போது நிகழ்ந்தால் மருத்துவரை பார்க்கவும்.

பலன்
இதை செய்யும் போது சளி இருந்தால் அது வந்து விடும் அதனால் கபாலபதி செய்யப்படும் போது கைக்குட்டையை வைத்துக்கொள்ளவும். இதை செய்தால்  தூக்கம் பறந்து விடும். அதனால் இரவில் செய்தால் தூக்கம் வருவது தள்ளி போகும். மூளை சுறுசுறுப்பு அடையும். இதை செய்து விட்டு நாடி சுத்தி மூச்சு  பயிற்சியை செய்யவும். ஏன்னா மூக்கின் ஓட்டைகள் இதனால் சளி இல்லாமல் தூய்மையாக இருக்கும் காற்று(மூச்சு) எளிதாக போய் வரும்






திங்கள், அக்டோபர் 23, 2017

இரத்தக்கட்டுக்கு நாட்டு மருத்துவம்


இரத்தக்கட்டுக்கு நான் பார்த்த நாட்டு மருத்துவர் புளியங் கொட்டையும் புண்ணாக்கையும் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்ட சொன்னார்.

என்னடா ஆளு ஆளுக்கு மாற்றி மாற்றி சொல்றாறேன்னு நினைத்தேன். இரண்டும் கேட்கும் என்று ஒருவர் கூறினார்.

சிந்தித்து பார்த்ததில் இரத்தக்கட்டு சமீபத்தில் ஏற்பட்டது  என்றால் புளியங்கொட்டையை மாவையும் நாள் பட்டது என்றால் புண்ணாக்கை அப்ப சொன்னதையும் தெரிந்து  கொண்டேன்.

தண்ணியை கொதிக்க வைத்து அதில் தூளான புளியங்கொட்டையை போட்டு மாவாக்கி  இரத்தக்கட்டு உள்ள இடத்தில் அப்பனும்.

ஒரு அக்கா இரத்தக்கட்டுக்கு மைதா மாவை  குழைத்து அப்ப சொன்னார்.

புளியங்கொட்டை மாவு, புண்ணாக்கு, மைதா மாவு கெட்டிச் சாறு என்று ஏதோ ஒன்றை பயன்படுத்தி இரத்தக்கட்டிலிருந்து விடுபடுவீர்களாக.

புதன், ஆகஸ்ட் 17, 2016

சிறியா நங்கை - மூலிகை செடி

ஒரு நாள் இரவு பிள்ளையார் கோயில் பூசாரி வீட்டுக்கதவை தட்டினார்.

என்னங்க இந்த நேரத்தில் என்று கேட்டதற்கு.

பாம்பு கடிச்சிறுச்சி என்றார்.

உடனே ஆஸ்பித்திரிக்கு போகாம இங்க வந்திருக்கிங்களே

இப்ப தாங்க கடிச்சுச்சு ஆஸ்பித்திரிக்கு போற வழியில் உங்க வீட்டுக்கு வந்தேங்க என்றார்.

ஙே

போனவாரம் உங்க வீட்டுக்கு கோயில் பிரசாதம் குடுக்கவந்தப்ப உங்க வீட்டில் சிறியாநங்கை இருப்பதை பார்த்தேன். அது பாம்பு மற்ற விச கடிக்கு சிறந்தது, சிறியாநங்கை இருக்குதா என்றார்.
சிறியா நங்கை

இருக்குதுங்க வேணுமுன்னா எல்லாத்தையும் எடுத்துக்குங்க என்றோம். நல்ல வேளை அதன் அருமை தெரியாம அது களைன்னு பிடிங்கி எறிய இருந்தோம். 3 நாள் கழித்து வந்திருந்தார் என்றால் அது இருந்திருக்காது.

நன்றி சொன்ன அவர், 2 செடிகளில் இருந்து இலைகளை உருவி தின்றுகொண்டு சென்றார். அதான் சிறியா நங்கை என்று அப்போது தான் தெரிந்துகொண்டோம்.

அப்ப தான் சிறியாநங்கையின் பயன்பாடு எங்களுக்கு தெரிந்தது. அச்செடியை நாங்க வைக்கவில்லை அது பாட்டுக்கும் தானா வளர்ந்திருந்து.
அடுத்த நாள் மீதி இருந்த இலையை தின்று பார்த்தோம் அப்பா என்ன கசப்பு. 

-நடந்ததை அப்படியே எழுதியுள்ளேன்.  இது புனைவு அல்ல.

அப்புறம் சிலர் சிறியாநங்கை இருந்தா பாம்பு வராது என்றார்கள். இச்செடியின் காற்று பாம்புக்கு ஆகாதாம். கடும் கசப்பு என்பதால் நீரழிவு பிணிக்கு இது மருந்தாம்.

வியாழன், ஜனவரி 08, 2015

இருமல் மூச்சிலுப்புக்கு


குழந்தைகளுக்கு பனி காலத்தில் சளி, இருமல், மூச்சிலப்பு (wheezing) அதாவது மூச்சு விட சிரமப்படுவார்கள் (அப்போது இதய துடிப்பு அதிகமாக இருக்கும் அதை வைத்து அறியலாம்)  ஆசுத்துமா மூச்சிலுப்பு வேற. அதுக்கு எனக்கு மருந்து என்னன்னு தெரியலை.  பனியிலோ, மழையிலோ நனையக்கூடாது, குளிரில் தலையை நன்றாக மூடி வெளியில் செல்லவேண்டும், பனிக்கூழ் (Ice cream) உண்ணக்கூடாதுன்னு மட்டும் தெரியும்.

அமெரிக்காவில் தான் இப்ப பனி கொட்டுதே; கொட்டாத இடத்தில் கடும் குளிர் உள்ளதே. குளிர் கால பிணி இது, அதாவது அக்காலத்தில் தான் அதிகபேருக்கு வரும்.

அக்குழந்தைகளை மருத்துவரிடம் காண்பிப்பார்கள். நாமும் ஏதாவது செய்தாகனும் இல்லையா?

அக்குழந்தைகளுக்கு நிறைய வெந்நீரை குடிக்க கொடுங்கள். மறுத்தால் பாலை தவிர நீராகமாக எதையாவது கொடுங்கள். பால் சளிக்கு நல்லதில்லையாம்.

அவர்களால் சரியாக தூங்க முடியாது அதனால நம்மாளும் தூங்க முடியாது.

இரவில் நன்றாக தூங்க தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் சூடாக்கி அதனுடன் கற்பூரத்தை கலந்து குழந்தையின் மார்பிலும் முதுகிலும் தேய்க்கவேண்டும். (ரொம்ப சூடு ஆபத்து, தோலை பதம் பார்த்து விடும்)

பச்சை கற்பூரம் நல்லது அது கிடைக்காவிட்டால் சாமி கும்பிட பயன்படுத்தும் சூடம் (கற்பூரம்).

எனக்கு சொன்னவரிம் பச்சை கற்பூரம் இல்லாததால் சாமி கும்பிட பயன்படுத்தும் கற்பூரம் தான் பயன்படுத்தினார். பலன் பெற்றார்.
இது அவர் எனக்கு கூறியது தான்.


செவ்வாய், ஜனவரி 06, 2015

கடுக்காய்

மனிதன் ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். மகிழ்ச்சியான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய் பறக்கிறான்.
 
ஐம்பூதங்கள் ஒரு மனிதனை அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனுடைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.
 
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.

உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'

உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படையாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்தவோட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய உடல் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே, அறிவியல் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் அறிவியல் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், சூடு, காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. சூட்டால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற்றால் போக்கிக் கொள்வதே அறிவுடைமை.

நமது உடலை நீட்டித்து, ஆயுளை அதிகப்படுத்த சித்தர்களைச் சரணடைவதே நன்று. வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.

மனித உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமையான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார். கடுமையான நோய்கள் உடம்பைத் தாக்கினால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், உள்ளம் (மனம்), ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை உற்பத்தி(விருத்தி) செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடுகிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் சூடு, வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.'

(எழுத்தாளர் சாரு (செயமோகனின் எதிரி :) ) இதை சாப்பிட்டு பலன் பெற்றாராம்)
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.

பல் நோய்கள் தீர...
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிச மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. 
வாழ்க வளமுடன்!


(மின்னஞ்சலில் வந்தது)
சாருவைப்பற்றி எழுதியது நான், இதை என் நண்பன் கூறினான் அவன் சாருவின் தீவிர பக்தன் :)

வியாழன், ஜனவரி 01, 2015

பிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)




பிராண முத்திரை - Prana Mudra
பிராண முத்திரை Prana Mudra
பிராண முத்திரை


செய்முறை:

சுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.

பயன்கள்
  • கண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.
  • சிறு நீரகத்துக்கு நல்லது.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • வயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.